வியாழன், 2 பிப்ரவரி, 2017

கண்ணா உன் உபேதேசங்கள் எல்லாம் மனிதர்களுக்குத்தானா?

கண்ணா உன் உபேதேசங்கள் எல்லாம் 
மனிதர்களுக்குத்தானா?

மனிதர்கள் ஆறறிவு உடையவர்கள்
என்கிறார்கள்

அவர்கள் நன்மை எது என்றும் தீமை
எதுவென்றும்
தர்மம் எதுவென்றும் அதர்மம்
எதுவென்றும்
இன்பம் எதுவென்றும் துன்பம்
எதுவென்றும்
பகுத்து அறியும் அறிவுடையவர்கள்
என்றும் தங்களை உயர்வாக
பீற்றிக்  கொள்கிறார்கள்(கொல்கிறார்கள் )

ஆனால் உண்மையில் அவர்கள்
சொல்கின்ற எந்த கூற்றையும் ஏற்று
வாழ்வில் நடைமுறை படுத்துவது
இல்லை என்பது உனக்கு தெரியும் .

அதனால்தான் கண்ணா நீயே
இவ்வுலகிற்கு வந்தாய் அவர்களுக்கு
நல்ல நெறிகளை அவர்களுக்கு
உணர்த்த

அது போதாதென்று உன்னுடைய
பட்டாளங்கள் அவ்வப்போது  அகிலத்தில்
தோன்றி தான்தோன்றித்தனமாக
திரிந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு
உபதேசம் செய்தாலும் இந்த பரதேசிகள்
அப்படியேதான் இருக்கின்றன.

எதையும்  ஆராயாமல்  மனம் போன
போக்கில் தானும் துன்பத்தில் சிக்கிக்கொண்டு
மற்றவரையும் இன்னலுக்கு ஆளாக்கும்
இந்த மனிதர்களுக்கு ஆறறிவு எதற்காக  அளித்தாய்?

பகுத்தறிவை பயன்படுத்தாது பாமரர்களை போல்
இந்த உலகை பாழ்படுத்தும் இவர்களுக்கு
தனி  அந்தஸ்தும் தேவையில்லை.

ஆறறிவிற்கு குறைந்த மற்ற உயிரெல்லாம்
உன் கட்டளையை ஏற்று இன்பம் துன்பம்
என்ற நிலையைக் கடந்து வாழுகையில்
எல்லாம் இருந்தும் எப்போதும் கவலையில்
மூழ்கி கிடைக்கும் மாந்தர்களை யார்
திருத்துவது?

கீதையில் இன்பம் துன்பம் கடந்த  ஆனந்த
நிலையில் வாழ எண்ணற்ற அறிவுரைகளை
இவ்வுலக மக்களுக்கு தந்தாய்.

அவற்றில் ஒன்று "சமநோக்குடன்வாழுங்கள் :
என்பது 

மனிதர்களிடம் அன்றும் இந்த குணம் இல்லை
இன்றும் அந்த குணம் இல்லை.
சாதாரண பிரச்சினைகளையும்
அசாதாரணமாக ஆகிவிடுகிறார்கள்.
அல்லல்படுகிறார்கள்.

மரணத்தை எதிர்கொள்ளும்வரை
அவர்கள் மனதில் ஆறாத "ரணங்கள்"
மட்டுமே உள்ளது.

மலர்கள்தான் உன் .அறிவுரையை ஏற்று 
செயல்படுத்துவத்தைக் கண்டேன். 

அவைகளும் மனிதர்களைப் போல்தான்
இவ்வுலகிற்கு வருகின்றன. சேற்றில் பிறந்தாலும்
நீரில் பிறந்தாலும் மொட்டாய் தோன்றி மலர்ந்து
மணம்  வீசுகின்றன. முட்களின் நடுவே இருந்தாலும்
அவைகளின் தோற்றத்தில்/செயல்பாட்டில்
எந்த மாற்றமும் இல்லை.

இறைவனின் பாதத்தில் வீழ்ந்தாலும் 
இறந்த மனிதர்களின் உடலின் மீது விழுந்தாலும் 
கவலைப்படுவதில்லை. 
தங்கள் கடமை முடிந்தவுடன் மீண்டும்
மண்ணில் கலந்துவிடுகின்றன. 

மனிதர்கள் தங்களை பற்றி மட்டுமே  எப்போதும் சிந்திப்பதையும்
பிறரை நிந்திப்பதையும் விட்டுவிட்டு தங்களை சுற்றி வாழும் உயிர்களிடமிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு
அவைகளை தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டால்.
இவ்வுலக வாழ்வு தித்திக்கும்.
மன கவலைகள் மறையும்.

1 கருத்து: