சனி, 27 ஆகஸ்ட், 2016

முகம் தெரியா பகைவர்கள்

முகம் தெரியா பகைவர்கள்

முகம் தெரியா பகைவர்கள் 




                              ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


முருகா !
உன்னை நான்
நினைக்க மறந்த போது
நடந்துவிட்ட விபரீதத்தை
கேளாய்

முகம் தெரியா பகைவர்கள்
ஆறு பேர்கள் முக்காடு
போட்டுக்கொண்டு என்
மனதினில் புகுந்து கொண்டார்கள்.

ஒளியாய்  இருந்த என் உள்ளம்
இருள் மண்டி போனது
தலைவன் இல்லா மாளிகையானது
தறுதலைகள்ஆ ட்டம் போடும்
கூடாரமாகியது

ஒவ்வொருவனும் என்னை படுத்தும்
பாட்டை என்னவென்று நான்
சொல்லுவேன்?

அவர்கள் படுத்தும் பாட்டினிடையே
எவ்வாறு உன் நாமத்தை பாடுவேன்?

ஒருவன் இறைவனே இல்லை என்று
எந்நேரமும் ஓயாமல் கூக்குரலிட்டுக் கொண்டு
திரிகிறான்

இன்னொருவன் எல்லாம் உனதென்று இருக்க
எல்லாம் தனதென்று எண்ணிக்கொண்டு
பேயாய் அலைகிறான்

மற்றவனோ அவனையும் என்னையும்
படைத்துக் காக்கும் உன்னை மறந்து
தானே அனைத்திற்கும் தலைவன்
என்று அகந்தை கொண்டு என்னை
நம்ப வைத்து நட்டாற்றில் தள்ளிக்
கொண்டிருக்கிறான்

இன்னொருவனோ பிறர் உயர்வு கண்டு
மகிழாமல் பொறாமை என்னும் தீயை மூட்டி
அதில் குளிர் காய்ந்து  கொண்டிருக்கின்றான்.

இப்படி எண்ணிலடங்கா தொல்லைகள் !

முகத்தை மறைத்துக்கொண்டு என்
நெஞ்சகத்தில் இருந்துகொண்டு
வஞ்சகமாக என்னை வதைக்கும் பாவிகள்
எதிரிகளை துரத்த அப்பாவியாகிய நான்
என்ன செய்வேன் ?

ஆறு முகம் கொண்ட  ஆறுமுகனே
ஆறுபடை வீடு கொண்ட வேல்முருகனே
காம க்ரோதாதி அசுரக்கூட்டம் என் உள்ளத்தில்
படை அமைத்து தங்கி என்னை வதைப்பதை
கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் எனோ?

இனியும் தாளேன் இவர்கள் இழைக்கும்
கொடுமைதன்னை

இக்கணமே என் இதயத்துள்ளிருந்து
வெளிப்பட்டு அந்த முகம்

 தெரியா எதிரிகளை
முற்றிலுமாய் விரட்டிடுவாய்
 "குகனே"குமரகுருபரனே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக