செவ்வாய், 13 ஜனவரி, 2015

இது தாண்டா தமிழ்நாடு

இது தாண்டா தமிழ்நாடு 

போகி திருநாளை புகையில்லா
தினமாக கொண்டாடுங்கள் என்று
கூப்பாடு போடுபவர்கள் போடட்டும்

ஊர்திகளில் ஏறிக்கொண்டு வீதிகள் தோறும்
நச்சுப் புகையை கக்கும் பிளாஸ்டிக் மற்றும்
ரப்பர்  பொருட்களை எரித்து நாசமாய்ப்
போகாதீர் என்று கரடியாய் (மனிதர்களின்
மொழி தமிழ் நாட்டு மக்களுக்கு (புரியாது )
சமூக  ஆர்வலர்களும் ,அரசு  இயந்திரங்களும்
கத்தியும்  பயனுமில்லை

அதிகாலையில்  வீட்டின் கதவைத்
திறந்தால் மூச்சு திணறியது.

நல்லதோர் புத்துணர்ச்சி தரும்
குளிர்ந்த காற்றை சுவாசிக்கலாம் என்ற ஆசை

தெருவெங்கும் காணு மிடமெல்லாம்   குவிந்துள்ள கருகிப்போன
டயர்களும்,அதில் எலும்புகூடுகளாய் தோற்றமளிக்கும்
கருகிய கம்பிகளும் எரியாமல் இன்னும்
புகைந்து கொண்டிருக்கும் பிளாஸ்டிக்
எச்சங்களும்,மிச்சங்களும்.

அதனால்தான் அன்றே ஒரு கவிஞன் பாடி வைத்தான்
"திருந்தாத  ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்" என்று

நோய்க்கிடம் கொடேல் என்றாள்
அவ்வை பாட்டி

ஆனால் நம் நாட்டு மக்களோ
நோய்க்கு வழி வகுக்கும்
கிருமிகளுக்கும், கொசுக்களுக்கும்
இடம் கொடுப்பது மட்டுமல்லாமல்
தங்கள் உடலையே அவைகளுக்கு தானமாக
வழங்கி பெருமை சேர்க்கின்றார் .
என்னே அவர் பெருந்தன்மை!

அதிகாலையில் கோயிலுக்கு சென்று
ஆண்டவனை வழிபடுகின்றார்.
தங்கள் வாழ்வு நன்றாக இருக்கவேண்டுமென்று.

கோயிலின் உள்ளே சிலைக்கு பன்னீரால் அபிஷேகம்
கோயிலுக்கு வெளியே சுற்றுசுவருக்கு
காரி துப்பும்எச்சிலாலும்
சிறு நீராலும்  நீராட்டு.விழா நடத்துகின்றார்.

கோயிலில் வருமானத்தில் குறியாய் இருக்கும்
நிர்வாகங்களுக்கு மக்களின் மல உபாதைகளை
தீர்த்து வைக்க ஒரு கழிப்பிடம் ஏற்படுத்தி அதை பராமரிக்க
மனம் கிடையாது.

புற்று நோயிலிருந்து நம்மை காக்கும்
தக்காளி விலை சரிந்தாலும் அதை வாங்கி
உணவில் சேர்க்கார்.

புற்று நோய் வந்தபின் கையில் இருக்கும் காசை
ஒழித்து நடைபிணம் போல் வாழ்வார்.

டாஸ்மாக் சாராயம் விலை விண்  முட்டும்
உயர்ந்தாலும் கவலைப்படாது
வயிறு முட்டக் குடித்துவிட்டு
வானத்தை நோக்கியபடியே
நடு வீதியில் விழுந்து
கிடப்பதையே வாழ்வில்
பெருமையாக கருதுவார்.

விலை மலிவாக கிடைக்கும் இனிக்கும்
கரும்புச்சாரை சுவைத்து  இன்புறார்.

அதன் சக்கையிலிருந்து கிடைக்கும் கழிவுநீரை
கூடுதல் விலை கொடுத்து
வாங்கி குடித்து மதி மயங்கி மயக்கத்தில்
கிடப்பதே ஆனந்தம் என்பார்.

கள்ளை ஒழித்த காந்திக்கு சிலை வைப்பார்
அவர் நினைவு நாளில் மலரிட்டு வணங்குவதுபோல்
பாசாங்கு செய்வார். ரகுபதி ராகவ ராஜாராம் என்று
பாட்டுப்பாடுவார்.

அடுத்த கணமே சாராயப் பாட்டிலை கையில்
ஏந்தி பாட்டிலு, பீரு, என்று தமிழ் திரைப்பட பாடலை
முணுமுணுத்துக்கொண்டே வீர நடை போடுவார்.

அன்று மட்டும் அரசு மதுவுக்கு விடுமுறை விடும்.
ஆனால் குடி பிரியர்களோ முதல் நாளே சரக்கை வாங்கி வைத்து காந்தி ஜெயந்தி அன்று குடித்து கும்மாள மிடுவார்.

சட்டத்தை மதிப்பதுமில்லை 
சான்றோர் வார்த்தைகளை செவி மடுப்பதுமில்லை 

ஒருவரை ஒருவர் வசை பாடி அழிந்துபோக சளைப்பதுமில்லை 
அற்ப காரணங்களுக்காக  அனுதினமும் ஒரு போராட்டம் 
ஒழுக்கமுமில்லை ஒழுங்குமில்லை.

வாழ்வில் லஞ்சமும் , வஞ்சமும் அதனால் எங்கு நோக்கினும்
பஞ்சமும் தலைவிரித்தாடுது நம் நாட்டில்

ஏழைப் பங்காளர்கள்  என்று சொல்பவர்கள் வாழுவது அடுக்கு மாடி கட்டிடங்கள் ,அனைத்து  வசதிகளுடன்.

அவர்களை வாழ வைக்கும் ஏழைகளோ எப்போதும் இருப்பது, பாம்புகளும் பூச்சிகளும்  வசிக்கும் சாலைகளிலும், பாழும் கட்டிடங்களிலும் தாம்

உழைக்கும் அம்மக்கள் என்றென்றும் அவர்களிடம் கையேந்திதான் 
வாழ்க்கை நடத்தவேண்டும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என்பதே அவர்கள் வகுத்த திட்டம். 

அவர்களின் தந்திரம் புரியாத அப்பாவி மக்கள் கூட்டம் நாள்தோறும் பெருகுதடா நம் நாட்டில். 

மனிதர்களை நம்பியும் பயனில்லை
மகேசனையும் நம்பி  பயனில்லை இந்நாட்டில்
யாரை நம்புவது?

இனி தன் கையே தனக்குதவி என்று தன்னை நம்புவதுதான் 
தரணியில் உள்ளோர்க்கு தங்கள் கண் முன்னே 
உள்ள தகைமையான வழி.


5 கருத்துகள்:

  1. வேறு வழியில்லை... முடிவில் சொன்னது தான் சரி...

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்திற்கு நன்றி KJ

    வறியவர் வாழ்விற்கு உத்தரவாதமில்லை அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, இருப்பிடம் இல்லை, உரிமையும் இல்லை.

    காகித பூக்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால் அது மணக்குமோ?

    கண்ணை விற்று சித்திரம் வாங்கியதுபோல்
    தமிழ் நாட்டு அடிதட்டு மக்களை குடிக்கு அடிமையாக்கி அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி,
    வீதிக்கு கொண்டுவரும் கலாசாரத்தை
    ஆண்டுதோறும் வளர்த்து வரும் அரசுகள் இருந்தென்ன போயென்ன?

    எங்கும் லஞ்சம் , எதற்கும், லஞ்சம் என்பதையே தங்கள் தாரக மந்திரமாகக் கொண்டு ,சுரண்டுவதும், சுருட்டுவதுமே தன வாழ்வின் லட்சியமாகக் கொண்டு செயல்படும் அரசியல் முதலைகளும், அவர்களின் ஒருதலைபட்ச செயல்பாடுகளும், மக்களின் துன்பங்களை தீர்க்க முயலாது அவ்வப்போது முதலைக் கண்ணீர் வடிப்பதும் போன்ற ,அவர்களுக்கு நன்மை செய்வதுபோல் நடித்து மக்களை ஏமாற்றும் கும்பல்களும், மக்களை கற்பனை உலகில் வைத்து கவனத்தை திசை திருப்பும் நடிக நடிகைகளும். இருக்கின்ற வரை நாம் கொண்டாடுவது உண்மையான பொங்கல் விழா ஆகாது

    விவசாயிகளின் வாழ்வில் அக்கறை கொள்ளாத சமூகமும், ஆளும் வர்க்கமும் திருந்தாத வரை எல்லாமே வெளி வேஷங்கள்தான்.

    கோடி கோடியாய் வங்கியில் கடன் வைத்து ஏமாற்றுபவனுக்கு பாதுகாப்பு இந்நாட்டில்?

    சிறு கடன் வாங்கி ,உண்மையாக அதை திருப்பிச் செலுத்த நினைத்தும், எதிர்பாராத இயற்கை அல்லது செயற்கை காரணங்களினால் செலுத்த இயலாத விவசாயிக்கு கடும் வட்டியும், தற்கொலையும்தான் பரிசு என்ற நிலை மாறாத வரைக்கும் இந்த நாட்டில் உண்மையான பொங்கல் ஏது?

    போளி சாப்பிட்டுவிட்டு போலித்தனமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதால் யாருக்கு என்ன பயன்?

    பதிலளிநீக்கு
  4. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்

    பதிலளிநீக்கு