புதன், 24 செப்டம்பர், 2014

பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள் உம்மை பற்றாது

பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள்  
உம்மை பற்றாது 

எங்கும் நிறைந்தவனே எழில் 
வடிவம் கொண்டவனே

அண்டத்து உயிர்களைக் காக்கும்
ஆதவனின் ஒளியாய் இருக்கின்றாய்

ஆணவம் கொண்டு அலைபவர்களை 
அழிக்கும் தீயாய் திகழ்கின்றாய் 

மாதவம் செய்த நல்லோர்களின் 
வேண்டுகோளை ஏற்று  பாரினில் 
யாதவனாய் அவதரித்து 
பாதகம் செய்பவர்களை அழித்தாய் 




எங்கும் நிறைந்தவனே எழில் 
வடிவம் கொண்டவனே கண்ணின் 
ஒளியாய் திகழும் கண்ணனே 





சொல்ல சொல்ல திகட்டாது உன் நாமம் 
சொல்லிக்கொண்டே இருந்தால் போதும் 
என்றும் எமை அண்டாது காமம் 

கர்ம வலையில் சிக்கித் தவித்த 
எமக்கு எளிதில் விடுபடும் 
வழியைக் காட்டினாய் 

பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள்  
உம்மை பற்றாது என்று பார்த்தன் மூலம்
பாரதப் போர் தொடங்கு முன்பு பறை சாற்றினாய்

உன் திருவடியைப் பற்றியவர்க்கு
இகத்திலும் பரத்திலும் பயமில்லை ,
நிலையான இன்பமுண்டு 
என்றுரைத்தாய். 

நினைவுள்ள வரை என் நெஞ்சில் 
இருக்கட்டும் உன் நாமம்

.உந்தன்  கவின் வடிவினைக் கண்டு ஆனந்தம் 
அடையட்டும் என் கண்கள் .கண்ணில் 
ஒளியிழந்தாலும் இதயத்தில் ஒளியாய் 
நிலைத்து நீங்காஇன்பம்  தந்திடுவாய் 

4 கருத்துகள்: